Pages

Tuesday, July 5, 2011

விடை தெரியாக் கேள்விகள் சில...


* வயசுப் பிள்ளைங்க தவறு செய்யும் போது உடனே அதட்டும் பெற்றோர் யாரும் நாமும் இவ்வயதில் இப்படித்தானே இருந்தோம் என உணர்ந்து அணைப்பதில்லையே???

* எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அரசியலில் குதித்து ஒரு பதவிக்கு வந்தவுடன் தன் சுயம் இழந்து விடுவதேன்???

* வீட்டில் அனைவரும் ஒன்றாய் அம்ர்ந்திருக்கையில் செல்லமகள் கேட்பாள் " அப்பா செத்ததுக்கு அப்புறம் நாம எங்க போவோம்???"

* பணம் அதிகமாக வைத்திருக்கும் எவருக்கும் தானம், தர்மம் போன்றவற்றில் ஈடுபாடு இருப்பதில்லை. ஏன்???

* என்னதான் தத்துவம் பேசினாலும் வருமானவரி கட்டும்போது போலி ரசீதுகளை சேகரித்து வரியை குறைக்க முயல்வதேன்???

* என்னதான் நெருக்கமான நட்பாயினும், அவர்களை பார்க்கும்போது அவர்கள் என்றோ நம்மிடம் கடனாக வாங்கிய பணம் கண்முன் வந்து போவதேன்???

* என்னதான் உருக உருக காதலித்தாலும் திருமணத்துக்கு பிறகு நிலை தலைகீழாவதேன்???

* எவ்வளவு அழகான சினிமா நடிகையும் சில கோணங்களில் பார்க்கையில் பயமுறுத்துவதேன்???

Sunday, February 27, 2011

ஆத்தாடி

கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் சில காகிதங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது ஒரு டாக்குமெண்ட் பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு மனிதர் தனது பெயருக்கு பின்னால் 30க்கும் மேற்பட்ட எழுத்துக்களை வைத்திருந்தார். நாமெல்லாம் ஒரு படிப்ப முடிக்கறதுக்குள்ளயே தட்டுத்தடுமாறிப் போயிடறோம். எப்படித்தான் இப்படியோ??? (தலைப்ப இன்னொருமுறை படிச்சு பாத்துக்கோங்க)

====================================================================

ஒரு சர்தார் வீட்டுல பூனை ஒண்ணு ரொம்ப நாளா தொல்லை பண்ணிட்டு இருந்தது. ஒரு நாள் அவர் அதைக் கொண்டுபோய் ஊருக்கு வெளில விட்டுட்டு வந்தார். வீட்டுக்கு வந்தபோது அவருக்கு முன்னால பூனை வந்திருந்தது. அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் தூரம் அதிகமா கொண்டுபோய் விட்டுட்டு வந்தார். ஆனா பாருங்க இந்தமுறையும் பூனை அவருக்கு முன்னால வீட்டுக்கு வந்திருந்தது. ரொம்ப கோபமா அதைத் தூக்கிட்டு ஊரைவிட்டு பல மைல் தொலைவில் விட்டுவருவதாக சென்றார். கொஞ்ச நேரத்தில் அவரது மனைவிக்கு ஒரு கால் வந்தது. சர்தாரேதான்.
சர்தார் : அந்த சனியன் புடிச்ச பூனை அங்க இருக்கா?
மனைவி : ஆமாங்க.
சர்தார் : அதை இங்க அனுப்பு. நான் வீட்டுக்கு வர்ற வழியை மறந்து தொலைச்சிட்டேன்.
மனைவி : ?????

Saturday, February 12, 2011

எந்தாயி


வேலைக்கு போயிட்டு வந்து
அக்கடான்னு நீ உக்காரையில
ஃபீஸ் கட்டணும்பேன்
ஒடனே முந்தான முடிப்புலருந்து
ரூவா தருவியே அதுக்காகவாவது,
ஊர சுத்திட்டு நான் வரைல
நீ சாப்பிடரத பாத்து
உன் தட்ட புடுங்கிட்டு
வேற போட்டுக்கோம்பேன்
நாஞ்சாப்பிட வரைல சும்மா இருந்திட்டு
அப்பறம் சொல்லுவியே
சாப்பாடு முடிஞ்சிதுன்னு அதுக்காகவாவது,
கண்ணாடி பாத்து நாந்தல சீவயில
பின்னாலிருந்து திடும்னு தலைக்கு
எண்ண தேச்சு விடுவியே அதுக்காகவாவது,
வீட்டுல கறி சமைச்சா யாருக்கும் தெரியாம
சோத்துக்குள்ள மறச்சு ரெண்டு துண்டு
அதிகந்தருவியே அதுக்காகவாவது,
ராவுல நான் குளிருல
நடுங்கையில கேக்காமலே
போத்தி விடுவியே அதுக்காகவாவது
இன்னொருக்கா ஓன்வகுத்துலயே
பொறக்கோணுந்தாயி!

Monday, January 24, 2011

சில்லுன்னு சில கிளிக்ஸ்

பருத்திக்காடு
சோளக்காடு

பொங்கலன்று பக்கத்து வீட்டு வாசலில்

கிணற்றுக் குளியல்

சோளக்காடு

தைப்பூச நாளன்று மாவு மாற்றும் விழாவின்போது


பழநியின் தோற்றம் (மலையிலிருந்து)


இடும்பன் மலை

பி.கு : இதெல்லாம் பொங்கல் விடுமுறையின் போது எனது மொபைலில் (k810i) எடுத்தவை.

Thursday, January 6, 2011

எங்களது புத்தாண்டு-2

முதல் பாகம் இங்கே...

சரியாய் பதினொன்றரை மணிக்கு ஒரு ஃபோன்கால்.

அது வேற யாரும் இல்லீங்க நம்ம மாப்பிள்ளை தான் (12:30 கல்யாணத்துக்கு 11:30 க்கு வர்றான்பாரு மண்டையன்). சந்திப்புக்கு அப்புறம் அருகிலிருந்த ஒரு கோயிலுக்கு போய் மணமகன் அலங்காரம் நடந்தது. இடையில் ட்ரம்ஸ் குரூப் மற்றும் அலங்கரிக்கப்பட்ட குதிரையும் வந்து சேர்ந்தது.

ஒரு வழியாய் ஒரு மணி அளவில் கோவிலை விட்டு வெளியே வந்தான்(ர்) மணமகன். ஆட்டம் பாட்டம் மேளதாளத்தோடு 1:50 மணி அளவில் கல்யாணப்பந்தலை வந்து சேர்ந்தார். உடனே மணமகனது அப்பா அருகிலிருந்த மணப்பெண்ணின் வீட்டிற்கு போய் அலங்கரிக்கப்பட்டிருந்த பெண்ணை தூக்கி வந்து மகனின் அருகில் நிறுத்தினார் (நல்ல வழக்கம்). பின் மணமகனின் தாயார் இருவருக்கும் ஆரத்தி எடுத்து பந்தலின் உள்ளே அழைத்து சென்றார்.


குத்தாட்டம்மணமகன்

இருவரும் மேடையின் மத்தியில் எதிரெதிராக ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தவாரு நின்றனர். மேடையின் ஒருபுறம் சீர்வரிசைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க மறுபுறம் மந்திரம் ஓதுபவர்கள் அமர்ந்திருந்தனர். பின் மந்திரம் ஓதத் தொடங்கினர். அரை மணி நேர ஓதலுக்கு பிறகு இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு மணமக்கள் இருவருக்கும் இனிப்பு பரிமாரப்பட்டது.

நம் ஊரில் பெண் கழுத்தில் தாலி ஏறியபிறகுதான் அட்சதை தூவுவோம். ஆனால் இங்கோ வித்தியாசமாக இருவரும் உள்ளே நுழைந்ததில் இருந்து மாலை மாற்றும் வரை அனைவரும் அட்சதை தூவிக்கொண்டே இருந்தனர்.

நம்ம ஊர்லதான் கல்யாணம் நடக்கும்போதே மக்கள் பந்தியில் நுழைவர் என்றால் இங்கும் அதற்கு விதிவிலக்கு இல்லை. சிலர் கல்யாண வைபவத்தின் இடையிலேயே தமது வேலையை பொறுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இங்கு ஒரு விசயம் என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது சாப்பிட்டபிறகு கை கழுவ அவ்ர்கள் செய்திருந்த ஏற்பாடு அருமையாக இருந்தது. நிலத்திற்கு நீர் பாய்ச்சும் குழாயில் இருந்து ஒரு குழாயை நீட்டித்து அதில் நிறைய துளைகள் இட்டு தொங்க விட்டிருந்தனர் (அதையும் ஒரு சோளக்காட்டின் வாய்க்காலில் அமைத்திருந்தனர்). கை கழுவும் நீரானது சிறிதும் வீணகாமல் பயிருக்கு சென்று சேரும் விதம் இருந்தது.

பழைய பம்பு மாடு கட்டுவதற்காககை கழுவும் இடம்வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள்

மணமக்களை சந்தித்து கொண்டு வந்த பரிசைக் கொடுத்துவிட்டு வாழ்த்துக் கூறி அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து வண்டியைக் கிளப்பினோம்.

வரும் வழியில் மீண்டும் பார், சரக்கு என வழக்கம்போல கொண்டாட்டம்தான். ஒருவழியாக வீட்டை வந்து சேர்கையில் இரவு மணி பன்னிரெண்டு இருபது. அப்புறம் என்ன தூக்கம் எம் கண்களை தழுவியதே.....

வேலையில் முடங்கி கிடந்த எங்களுக்கு புது இடம், புது மக்கள் என இனிமையான அனுபவமாய் அமைந்தது இந்த பயணம்.

Wednesday, January 5, 2011

எங்களது புத்தாண்டு...

முதலில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த வருடத்தின் முதல் நாள் இனிதாகவே கழிந்தது. புதுவருட கொண்டாட்டத்திற்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் என்னோடு அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஓருவர் அவரது திருமணத்திற்கு அழைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அவரது திருமணம் ஒன்றாம் தேதி அன்று இருந்ததால் இந்த 1111ஐ வித்தியாசமாக கொண்டாடும் விதத்தில் அங்கு செல்வதென தீர்மானிக்கப்பட்டது. திருமணமோ மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரின் அருகில் தேவ்லா அருகே ஒரு கிராமத்தில் நடைபெருவதாக இருந்தது. இருப்பினும் நாங்கள் பன்னிரண்டு பேர் சேர்ந்து ஒரு வண்டி ஏற்பாடு செய்து 31/12/2010 அன்று இரவு 9 மணிக்கு கிளம்பினோம்.

அந்த குழுவில் நான் மற்றும் எனது அறை நண்பர்கள் இருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா-வை சேர்ந்தவர்கள். ஒன்றரை நாள் மராட்டி பேசும் மக்களுக்கிடையே எவ்வாறு கடத்துவது என்ற பலத்த யோசனையுடனே கிளம்பினோம்.

வண்டியில் செல்லும்போதே அனைவரும் அவரவர் நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் பொருட்டு தத்தமது அலைபேசியுடன் ஐக்கியமாயிருந்தனர். இரவு 11:30 மணிக்கு வண்டி ஒரு பாரில் நின்றது (நிறுத்தப்பட்டது). வட்டமேசை, சீரியல் லைட், மெல்லிய விளக்கு வெளிச்சம் என அமர்க்களமாய் ஆரம்பித்தது (அந்த குரூப்பிலேயே நானும் ஒரு நண்பரும் தான் பாவம், சரக்கு அடிக்கல அதான்). சரியாய் பன்னிரெண்டு மணிக்கு சியர்ஸ் சொல்லி ஆரம்பித்தது பார்ட்டி. கேர்ள் பிரண்டு இருந்தவர்களுக்கு அந்த நடுநிசியிலும் ஃபோன்கால். பின் ஒரு ஒன்றரை மணி அளவில் அங்கிருந்து கிளம்பினோம். விடிகாலை ஐந்தே முக்கால் மணி அளவில் மணப்பெண் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் (இங்கெல்லாம் கல்யாணம் பொண்ணு வீட்டுலதான் நடக்குமாம்).

அந்த இடம் பார்த்த உடனே எல்லோருக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. காரணம் என்னவெனில் பச்சைப்பசேல் என ஒரு பக்கா கிராமத்துக்கான தகுதியுடன் இருந்தது. அந்த நேரத்தில் அங்கிருந்த அனைவரும் தூங்கிக்கொண்டிருந்ததால் (காலங்காத்தால தூங்காம என்ன பண்ணுவாங்களாம்) நாங்களும் அவர்களை தொந்தரவு செய்யாமல் வண்டியிலிருந்து இறங்கி அங்கிருந்த குப்பை கூளங்களை வைத்து தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தோம்.

பின்பு ஒரு வழியாக அந்த வீட்டுக்கதவு திறந்து ஒவ்வொருவராக வெளியே தலைகாட்ட ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் வந்து எங்களை யார்? என்ன? என விசாரித்து விட்டு சென்று விட்டார் (பன்னிரண்டரை மணி கல்யாணத்திற்கு ஆறு மணிக்கே வந்தா அப்படித்தான் இருக்கும்). குளிர் வேறு பயங்கரமாய் வாட்டிவதைத்து கொண்டிருக்கவே மணமகனுக்கு ஃபோன் செய்தோம்.

அடுத்த வினாடியே அங்கிருந்த ஒரு இளைஞருக்கு (மணமகளின் சகோதரன்) ஒரு அழைப்பு வந்தது. அதற்கடுத்த நிமிடங்களில் சுடச்சுட காப்பியும், பிஸ்கட்டும் வந்தது. பின் பல்துலக்க பேஸ்ட் மற்றும் குளிக்க வெந்நீர் என சகலமும் தேடி வந்தது (மாப்பிள்ளை கெத்து). குளித்து முடித்த பின்பு தான் கவனித்தோம் அந்த வீட்டில் கல்யாண வீட்டிற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

நம்ம ஊர்ல கல்யாணம்னா பல நாட்களுக்கு முன்னயே பந்தல் தோரணம்னு ஜமாய்ச்சுருவாங்க. ஆனா அங்கயோ நிலைமை தலைகீழ். எல்லோரும் தத்தமது வேலைகளில் மும்முரமாய் இருந்தனர். அப்புறம் அந்த ஊரை சுற்றி பார்ப்போமே என வெளியே கிளம்பினால் அதிர்ச்சி. அங்குள்ள பெரும்பாலான வீடுகள் இடிந்த நிலையில் இருந்தன.

பின்பு பசி காரணமாக வண்டியை எடுத்துக் கொண்டு வந்த வழியிலேயே பதினைந்து கிலோமீட்டர் தள்ளி போய் காலை உணவு உண்டோம் (காலை உணவுன்னா ரொம்ப இமாஜினேசன் பண்ண வேண்டாம். ரெண்டு உருளைக்கிழங்கு போண்டாவும் கொஞ்சம் மிளகாயும்தான்).

திரும்பி வந்தபோது பந்தல் போட்டுக் கொண்டிருந்தனர். பந்தல், மணமேடை, உணவு உண்ணும் இடம் என அனைத்தும் ஒரு காட்டில் தயாராகிக் கொண்டிருந்தது. அதன்பின் மணமகன் வரும்வரை அங்கும் இங்கும் பராக்கு பார்த்து கொண்டு திரிந்தோம்.
சரியாய் பதினொன்றரை மணிக்கு ஒரு ஃபோன்கால்.

தொடரும்....

{ பதிவின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக பிரிக்க வேண்டியதாயிற்று. பொருத்தருள்க.}